வந்தாரை வாழ வைத்தவன்
வாழ வழியற்று
எலிக்கறி சாப்பிடுகிறான்
யாழிசையும் எழுநிலை மாடமும் என்றால்
"இன்னாபா து ??" என்கிறான்
செந்தமிழ் , பாரதி, தமிழன் என்றால்
"வோட்டு வோணுமா ?? துட்டு எவ்ளோ ???" என்கிறான்
மானாட மயிலாட
பார்க்கத் தெரிந்த மரத் தமிழன்
முறத்தால் நங்கையர்
புலி விரட்டிய மாண் பறிவரோ??
பேட் மேனும் சூப்பர் மேனும் தெரிந்தவனுக்கு
கனக விசயனின் தலை சுமந்த கதை தெரியுமா ??
பேச , எழுத, படிக்க அறிகிற வகையில்
பெர்னாட்ஷாவின் பிள்ளைகள் நாம்..
சிற்பமும், சுதையும்
சிறந்தோங்கிய கோவில் வெளிகள்
யுனெஸ்கோ அறிந்த ரகசியசங்கள்
டாஸ்மாக் தமிழனுக்கு தெரியுமா என்ன??!!
யவனமும், இலெமூரியாவும்
ராசா ராசன் கட்டிய நாவாயும்
யாரறிவர்?
மெட்டியின் குறிப்பில் முகம் நோக்கும்
தமிழனின் மாட்சிமை அறிவரோ
தமிழச்சியின் பிள்ளைகள் ..
தாய்மொழியில் படிக்கக் கட்டாயச் சட்டம்,
தமிழில் பெயர் வைத்தால் வரிவிலக்கும்
தமிழிலும் அர்ச்சனை செய்யப்படுவதும்
கட்டியம் கூறும் நம் மாட்சிமையை !!!
அரசியல்வாதியின்
நாவினில் மட்டுமே நர்த்தனமாடுகிறாள்
அபலையாய்ப் போன தமிழன்னை ..இன்று !!
'பண்ணி 'த் தமிழின் தேவையும்,சேவையும்
சங்கமித்துப் போகலாம் இன்னுமோர்
ஆழிப் பேரலை வந்து சென்றிடில்!!!